
சென்னை: மே 23 –
காய்ச்சல், சளி, தொண்டை வலி, உடல் வலியுடன் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இது கரோனா தொற்று பாதிப்பாக இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், உடலில் நீர்ச்சத்து இழப்பு போன்ற பிரச்சினைகளால் ஏராள மானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் வசதிக்காக, அரசுமருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், டைபாய்டு, டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் பலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்கள் 3 அல்லது 4 நாட்களில் குணமடைந்து வந்த நிலையில், தற்போதைய காய்ச்சல் ஒருவாரத்துக்கு மேல் ஆகியும் குணமடைய முடியாத நிலை உள்ளது.
அதுவும் குறிப்பாக, கரோனா தொற்றுக்கு இருந்ததை போல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமல், தொண்டை வலி, சளி தொந்தரவு, இருமல், கடுமையான உடல்வலி போன்றவைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால், மீண்டும் கரோனா தொற்று பரவல் தொடங்கியுள்ளதா என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசு மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல் இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுவாக காய்ச்சல்களுக்கான அறிகுறிகள் ஒரே மாதிரி தான் இருக்கும். கரோனா தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் போல் தற்போது செய்வதில்லை. தேவையனவர்களுக்கு வேண்டும் என்றால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர். அரசு மருத்துவர்களிடம் கேட்டபோது, “காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கரோனா தொற்று பரிசோதனை செய்யுமாறு கேட்டால், பரிசோதனை செய்யப்படும்” என்றனர்.


















