
புதுடெல்லி, மே 23- இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் கடந்த 2024-ல் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதி சுற்று வரை முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக கடைசி நேரத்தில் அவரது உடல் எடை 50 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் மல்யுத்த போட்டிகளில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ள அவர், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வகையில், மீண்டும் மல்யுத்த போட்டியில் களமிறங்க உள்ளார். ஆனால், ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளின்படி, ஓய்விலிருந்து திரும்புபவர்கள் 6 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும் என்ற விதியைக் காரணம் காட்டி வரும் ஜூன் 26-ம்தேதி வரை உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வினேஷ் போகத்துக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் தடைவித்தது. இது ஒருபுறம் இருக்க பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, வினேஷ் போகத் மகப்பேறு விடுப்பில் இருந்தார். அவர் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்ப முயன்ற நிலையில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தேர்வுத் தகுதி விதிகளில் இந்திய மல்யுத்த சம்மேளனம் திடீர் மாற்றங்களைக் கொண்டு வந்தது. புதிய விதிகளின்படி, 2025 மற்றும் 2026-ல் நடந்த குறிப்பிட்ட உள்நாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மட்டுமே தேர்வுத் சோதனைகளில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இதனால், விடுப்பில் இருந்த வினேஷ் போகத் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுத் தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க முடியாதபடி “தகுதியற்றவர்” என இந்திய மல்யுத்த சங்கம் அறிவித்தது. இதனால் வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கான வீரர்கள் தேர்வில் வினேஷ் போகத் கலந்து கொள்ள முடியாத நிலை உருவானது. இதை எதிர்த்து வினேஷ் போகத் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை கடந்த 18-ம் தேதி விசாரித்த தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நேற்று தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தனிப்பட்ட மோதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் காரணமாக சர்வதேச வீராங்கனையின் விளையாட்டு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்றும், சம்மேளனம் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவது போல் நடக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.


















