
புதுடெல்லி: ஜூன் 30-
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.இதன் முதல் கட்ட விசாரணையில் திருட்டு உறுதி செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. விசாரணையில் முக்கியமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளையின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ராமர் கோயிலில் பெறப்படும் காணிக்கைகள் தொடர்பாக, கடந்த பிப்ரவரி 2024-ல் எஸ்பிஐ மற்றும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. உண்டியலில் இருந்து காணிக்கைகளை எடுப்பது, அவற்றை எண்ணுவது மற்றும் வங்கியில் செலுத்துவது ஆகிய பொறுப்புகள் எஸ்பிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டன.
தொடக்கத்தில், இப்பணிக்காக 10 பேர் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர். மாதாந்திர காணிக்கை வரவு 14 முதல் 15 கோடி ரூபாயாக உயர்ந்ததால், எஸ்பிஐ ஒரு தனியார் முகமை மூலம் ஊழியர்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்தியது. இருப்பினும், அந்த முகமைக்கு ஒப்பந்தம் டெண்டர் மூலம் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அதே சமயம், அந்த முகமையின் பணியாளர்களின் பின்னணி பற்றி காவல் துறை சரி பார்த்ததாகவும் தெரியவில்லை. அவர்களில் பலர் கோயில் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் டின்னு யாதவ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் பணியமர்த்தப்பட்டதாகத் தகவல் உள்ளது. இதனால், கைதான 8ல் 5 பேர் ஒருவொருக்கு ஒருவர் உறவினர்கள். எனவே, இது குறித்து எஸ்ஐடி தீவிரமாக விசாரிக்க உள்ளது.


















