Home செய்திகள் உலக செய்திகள் பிரம்மாண்ட வெற்றி! ஆஸ்திரியாவை ஊதி தள்ளியது ஸ்பெயின்

பிரம்மாண்ட வெற்றி! ஆஸ்திரியாவை ஊதி தள்ளியது ஸ்பெயின்

வாஷிங்டன்: ஜூலை 3-
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நாக் அவுட் சுற்றான ‘ரவுண்ட் – 32’ போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, 3 – 0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ‘ரவுண்ட்- 32’போட்டியில், பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியும், ஆஸ்திரியா அணியும் மோதின. ​​​
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஸ்பெயின் வீரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். ஆட்டத்தின் 36வது நிமிடத்தில், ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் மைக்கேல் ஒயர்சபால், அதிரடியாக ஒரு கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார்.
இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 1 – 0 என முன்னிலை பெற்றது. ஆஸ்திரியா திணறல்:
​இரண்டாவது பாதியிலும் ஸ்பெயின் அணியின் பலத்த தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரியா வீரர்கள் திணறினர். ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெட்ரோ போரோ ஒரு சூப்பரான கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து போட்டியின் 89வது நிமிடத்தில், மீண்டும் ஒருமுறை மாயாஜாலம் செய்த மைக்கேல் ஒயர்சபால் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
ஆட்ட நேர முடிவில் 3 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை துவம்சம் செய்த ஸ்பெயின் அணி, அடுத்த சுற்றுக்கு கம்பீரமாக தகுதி பெற்றது. தோல்வியடைந்த ஆஸ்திரியா அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.