
மெல்போர்ன், ஜூலை 9- இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக இந்தோனேசியா பயணத்தை நிறைவு செய்த அவர், அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியா சென்றார். மெல்போர்ன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு இந்திய வம்சாவளியினர் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ஆஸ்திரேலிய-இந்திய இசைக்குழுவின் ‘வந்தே மாதரம்’ பாடலை இசையமைத்தனர். இதனை பிரதமர் மோடி மெய்மறந்து நின்று கேட்டு ரசித்தார். அதன்பிறகு, இந்தியாவின் தபேலா மற்றும் ஆஸ்திரேலியாவின் பழமையான ‘டிட்ஜெரிடூ’ கருவையைக் கொண்டு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியையும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தார். வெளிநாடுகளிலும் இந்திய பாரம்பரிய நடனங்களை பிரபலப்படுத்தும் விதமாக, கதக் நடனத்தையும் இந்திய வம்சாவளியினர் அரங்கேற்றினர். தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு, இந்தியா, ஆஸ்திரேலியா தொழில்முனைவோர் சந்திப்பில் தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது;- இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. நாம் ஒன்றிணைந்து, நம்பிக்கையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான கூட்டாண்மைகளை உருவாக்க முடியும். எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனம் இந்தியாவில் ரூ.3,300 கோடி முதலீடு செய்ய முன்வந்ததை பிரதமர் மோடி வரவேற்றார். இது குறித்து எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், ‘ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனத்தின் சிஇஓ பால் ஷ்ரோடர் இன்று காலை மெல்போர்னில் அறிவித்த, ரூ.3,300 கோடி முதலீட்டை இந்தியா வரவேற்கிறது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தப் பாதையின் மீது உலகிற்கு இருக்கும் நம்பிக்கையின் மற்றொரு சான்று இதுவாகும். மேலும், இது நமது துடிப்பான பொருளாதாரம் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு வழங்கும் மிகப்பெரிய வாய்ப்புகளையும் பிரதிபலிக்கிறது,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.



















