இதுதான் இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் பிட்ச்சா?

ஹெடிங்க்லே, ஜூன் 17- இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச், அதிக புற்களுடன் பச்சை நிறத்தில் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் ஒரு தகவல் பரவி வருகிறது. இங்கிலாந்து ஹெடிங்லே மைதானத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வைத்து இந்திய ரசிகர்கள் பல்வேறு ஊகங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இது முற்றிலும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம், இங்கு மண்ணை பார்க்கவே முடியாத, அதிக புற்கள் நிறைந்த ஒரு பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தகவலை பரப்பி வருகின்றனர். ஆனால், இது குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் ஹேடிங்லி (Headingley) மைதானத்தின் பிட்ச் வடிவமைப்பாளர் பேசியிருக்கிறார். அவர் இந்த போட்டிக்கான பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் எனவும், 5 நாட்களும் போட்டி நடைபெறும் வகையில் பிட்ச் தயார் செய்யப்படும் எனவும், மைதானத்தில் இருக்கும் புற்கள் வெட்டப்படும் எனவும் உறுதியளித்து இருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், “இந்த போட்டியின் போது வெப்பம் அதிகமாக இருப்பதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்து இருக்கின்றன. எனவே, ஆடுகளம் சற்று ஈரமாக இருக்கும் வகையில் நாங்கள் தயாரிக்கப் போகிறோம். அதன் பிறகு ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம். இந்தப் பிட்சின் மீது இருக்கும் புற்கள் வெட்டப்படும். இந்த வெயில் காலம் எங்களுக்கு மிகவும் ஈரப்பதம் இல்லாததாக இருந்தது. எனவே, நாங்கள் பிட்சில் அதிக நீரை செலுத்தி இருக்கிறோம். அதனால் ஐந்து நாட்களும் பிட்ச் நன்றாக இருக்கும். இது மூன்று நாட்கள் போட்டியாக இல்லாமல் ஐந்து நாட்கள் போட்டியாக இருக்கும் என நம்புகிறோம். இது பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு நன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். முதலில் பந்துவீச்சாளர்களுக்கு சற்று உதவி கிடைக்கும். அதன் பிறகு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறும். முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுத்தால் அது நல்ல ஸ்கோராக இருக்கும். அடுத்த இரண்டு இன்னிங்ஸ்கள் அதைவிட அதிக ஸ்கோர் எடுக்க முடியும்” என்றார் ஹேடிங்லி மைதானத்தின் பிட்ச் வடிவமைப்பாளர்.