
திருப்பூர்: ஜூலை 1 -கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக வாட்ஸ்அப்பில் தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு, காரில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கணவர், மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக கோட்டாட்சியர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். இவரது மனைவி ரிதன்யா (27). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மொண்டிபாளையம் அருகே காரில் விஷமருந்தி ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன்பாக ரிதன்யா தனது தந்தைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோ பதிவில், “நான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் திருமண வாழ்க்கைதான். கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர்தான் தற்கொலைக்கு காரணம்” என்று தெரிவித்திருந்தார்.
அவிநாசி அரசு மருத்துமனையில் நேற்று முன்தினம் ரிதன்யாவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு வைக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை ரிதன்யாவின் உறவினர்கள் முற்றுகையிட்டு, தாக்க முயன்றனர். அவர்களை போலீஸார் மீட்டு, அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.இந்நிலையில், ரிதன்யாவை துன்புறுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக சேவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரைக் கைது செய்தனர்.