
டெல்லி, மே 14- அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதற்கான காரணத்தை மத்திய அரசு விளக்கியுள்ளது. இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்காக பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்தே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதேபோல் தங்கம் மற்றும் வெள்ளி தேவைகளிலும் இறக்குமதியை அதிகமாக நம்பியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியா அதிக அளவில் டாலர்களை செலவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தங்கம் மற்றும் வெள்ளி மீது இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் இந்தியா 72 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.6.89 லட்சம் கோடியாகும். இது நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தங்கம், வெள்ளி இறக்குமதியை குறைப்பதன் மூலம் வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும், தொடர்ந்து சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இறக்குமதி குறைந்தால் டாலருக்கான தேவை குறையும். அதனால் ரூபாயின் மதிப்பு சீராக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தேவையற்ற தங்க வாங்குதலை மக்கள் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தையும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மக்கள் ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரி உயர்வு காரணமாக உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையும் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சர்வதேச சந்தை நிலவரத்தால் தங்க விலை அதிகரித்து வரும் நிலையில், இறக்குமதி வரி உயர்வும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















