
புதுடெல்லி, ஜூலை 23- சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதால், நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும், சரவெடி தயாரிக்கக் கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிக காற்று மாசுவை ஏற்படுத்தும் பேரியம் என்ற வேதிப்பொருள் இல்லாமல் நாடு முழுவதும் பசுமை பட்டாசு தயாரித்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், பசுமை பட்டாசு என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பேரியம் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் அடங்கிய பட்டாசு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதால், நாடு முழுவதும் பட்டாசுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா, எம்.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், பசுமை பட்டாசில் இருக்கும் நிறை, குறைகள், பாதிப்புகள் குறித்த அறிக்கையை இரண்டு வாரத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.













