வாஷிங்டன்: ஜூலை 25
அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற டெக் நிறுவனங்கள் இந்தியர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். வாஷிங்டனில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய ஐடி ஊழியர்களுக்கு வேலை வழங்குவதை குறைப்பது முக்கியம் என்றும் அவர் டெக் நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளார். அந்த நிகழ்வில் டிரம்ப் பேசியதாவது, “அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து, இந்தியாவில் ஊழியர்களை நியமித்து, அயர்லாந்தில் லாபத்தை பதுக்கி வைத்திருக்கின்றன. இனி அப்படி செய்ய முடியாது. அதற்கான நாட்கள் எல்லாம் முடிந்துவிட்டன. உள்நாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

















