சென்னை: டிசம்பர் 30 –
ஆட்சியில் பங்கு கோரிக்கையை ஏற்க முடியாது, கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என காங்கிரஸ் உட்பட தோழமை கட்சிகளிடம் திமுக திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை திமுக முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு, உடன்பிறப்பே வா, மண்டல மாநாடுகள் போன்ற தொடர் செயல்பாடுகளை திமுக முன்னெடுத்து வருகிறது. அதேநேரம்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.
தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பேசியபோது கூட்டணி ஆட்சி என அறிவித்தார். இதன்தொடர்நிகழ்வாக திமுக கூட்டணியில்
இந்த விவகாரம் பேசுபொருளானது. எனினும், இதில் திமுக தொடர்ந்து மவுனம் காத்துவந்தது. இந்நிலையில் கூட்டணி ஆட்சி கோரிக்கையை ஏற்க முடியாது என தோழமை கட்சிகளிடம் திமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவைப் பொறுத்தவரை சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், இது கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். வாக்காளர்களிடமும் திமுக தனித்து மெஜாரிட்டி பெறாது என்ற தவறான பிம்பத்தை உருவாக்கிவிடும் என்று அதன் தலைமை கருதுகிறது. இதன் காரணமாக தொகுதிப் பங்கீட்டில் வேண்டுமானால் சில சமரசங்களை செய்கிறோம். ஆனால், அதிகாரப் பங்கீடு கோரிக்கையை கைவிட வேண்டுமென தோழமைக் கட்சிகளிடம் திமுக தலைமை தெரிவித்துவிட்டதாக திமுக தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.













