
சென்னை: ஏப்ரல் 16-
தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜி தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சொத்து விவரங்களை வேட்புமனுவில் படிவம் 26-ல் தெரிவிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது மனைவியின் சொத்துக்களை குறிப்பிடாமல் மறைத்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
117 கோடி ரூபாய் சொத்துக்களை கொண்ட மார்ட்டின் ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ், 123 கோடி ரூபாய் சொத்துக்களை கொண்ட டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக உள்ள ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்ஸிக்கு சொந்தமான சொத்துக்களின் விவரங்களை வேட்புமனுவில் ஆதவ் அர்ஜுனா குறிப்பிடவில்லை என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த சொத்துக்களில் பல, அமலாக்க துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு பரிசீலனையின் போது, மனைவியின் சொத்துக்களை ஆதவ் அர்ஜுனா மறைத்துள்ளதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும், அதை முறையாக பரிசீலிக்காமல் நிராகரித்து விட்டதாக தேவராஜன் மனுவில் கூறியுள்ளார். தனது புகாரை நிராகரித்து தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்; அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; சொத்து விவரங்களை மறைத்த விவகாரம் தொடர்பாக தான் அளித்த புகார் மீது முறையாக விசாரணை நடத்த தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


















