இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

லண்டன், ஜூலை 25- அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, லண்டனில் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். அப்போது, அவர்களது முன்னிலையில் இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த 23-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். அங்கு அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: பிரதமர் மோடி: இது வரலாற்று சிறப்புமிக்க தினம். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு. தற்போது இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடையும். இந்திய இளைஞர்கள், விவசாயிகள் பயனடைவார்கள். இரு நாடுகளிலும் எளிதாக வணிகம் தொடங்கு வதற்கு ஏற்ற சூழல் உருவாகும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் குருகிராமில் சவுத்ஆம்டன் பல்கலைக்கழகத்தின் கிளை கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இங்கிலாந்தின் 6 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை தொடங்க உள்ளன. இங்கிலாந்தில் இந்திய வேளாண் விளை பொருட்கள், உணவு வகைகள், ஜவுளி ரகங்கள், காலணிகள், நகைகள், வைரங்கள், கடல் உணவுகள், இன்ஜினீயரிங் பொருட்களும், இந்தியாவில் இங்கிலாந்தின் மருத்துவ உபகரணங்கள், விமான உதிரி பாகங்களும் குறைந்த விலைக்கு கிடைக்கும். தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், கல்வி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), செமி கண்டக்டர், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் ஸ்மார்மருக்கு நன்றி. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஒருபோதும் இரட்டை நிலைப்பாடு இருக்க கூடாது. ரஷ்யா – உக்ரைன் போருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். மத்திய கிழக்கில் நிலவும் குழப்பங்களுக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும். இந்தியா – இங்கிலாந்து இடையே முக்கிய உறவு பாலமாக கிரிக்கெட் திகழ்கிறது. இரு நாட்டு மக்களும் இதை பெரிதும் நேசிக்கின்றனர். அரசுமுறை பயணமாக இந்தியா வருமாறு இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருக்கு அழைப்பு விடுக்கிறேன்.