
ஹைதராபாத்: ஜனவரி 30-
ஹைதராபாத் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் நாட்டின் வணிக ரீதியிலான விமானங்களின் எண்ணிக்கை 2,250-ஆக உயரும் என ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ைதராபாதில் நடைபெற்று வரும் ‘விங்ஸ் இந்தியா 2026’ சர்வதேச விமானக் கண்காட்சியில் பங்கேற்ற ஏர்பஸ் இந்தியாவின் தெற்காசியப் பிரிவின் தலைவர் ஜூர்கன் வெஸ்டர்மேயர் கூறியதாவது:இந்தியா தற்போது 850 விமானங்களைக் கொண்டுள்ளது. இது வரும் 2035-ம் ஆண்டுக்குள் மூன்று மடங்கு அதிகரித்து 2,250-ஆக உயரும். இதன் மூலம் உலகின் மூன்றாவது மிகப் பெரிய சிவில் விமானப் போக்குவரத்துச் சந்தையாக இந்தியா உருவெடுக்கும். தற்போது இந்திய விமான நிறுவனங்கள் 1,700-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஆர்டர் அளித்துள்ளன. இதில் 72 சதவீதம் ஏர்பஸ் நிறுவனத்தை சார்ந்தவை. இந்தியாவுக்காக ஆண்டுக்கு சராசரியாக 120 முதல் 150 விமானங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அதாவது வாரத்துக்கு 2 விமானங்கள் என்ற வீதம் விநியோகம் செய்யப்படும்.முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, பாகங்கள் இணைக்கப்பட்ட முதல் ‘சி-295’ ரக ராணுவப் போக்குவரத்து விமானம், 2026-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படும். மேலும், எச்-125 ரக ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவை அடுத்த ஆண்டு விநியோகிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

















