காசா, நவ. 11- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட கத்தார் அரசு, தற்காலிகமாக அந்த முயற்சியை நிறுத்தி வைத்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே ஒரு ஆண்டாக போர் நடக்கிறது. இதில் இஸ்ரேலில், 1,500 பேரும், காசாவில், 43,000 மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் செய்வதற்கான மத்தியஸ்தராக மற்றொரு மேற்காசிய நாடான கத்தார் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் காசாவில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஹமாஸ், இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்வதை கத்தார் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து கத்தார் அதிகாரிகள் கூறியதாவது: காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே செய்து வந்த மத்தியஸ்த முயற்சியில் இரு தரப்பினரும் தீவிர ஆர்வம் காட்டவில்லை. எனவே மத்தியஸ்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இது குறித்து இஸ்ரேல் அதிகாரிகளிடமும், ஹமாஸ் உறுப்பினர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Home செய்திகள் உலக செய்திகள் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த முயற்சி; தற்காலிகமாக கைவிட்டது கத்தார் அரசு