
புதுடெல்லி, ஜூன் 4- அபுதாபியில் குடியிருப்புகள், வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த சொத்துகளுக்கான வாடகை உயர்வை அடுத்த அறிவிப்பு வரும் வரை அரசு முடக்கி வைத்துள்ளது. இதன்படி வீட்டு உரிமையாளர்கள் தற்போதுள்ள வாடகைதாரர்களுக்கு வாடகையை உயர்த்தவோ அல்லது இதற்கு முன்பு வாடகைக்கு விடப்பட்ட சொத்துகளில் குடியேறும் புதிய வாடகைதாரர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். அபுதாபியின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அமைப்பான அபுதாபி ரியல் எஸ்டேட் மையம் இந்த முடிவை அறிவித்துள்ளது, மேலும் இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் – அமெரிக்க போர் காரணமாக அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க பல குடும்பங்களும் வணிகர்களும் போராடி வரும் வேளையில் இந்த மாற்றம் உடனடி நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மாதத்தின் மிகப்பெரிய செலவாக பெரும்பாலும் வாடகையே இருக்கிறது. அந்நாட்டின் மிகப்பெரிய வெளிநாட்டுச் சமூகங்களில் ஒன்றாக விளங்கும் இந்தியர்களுக்கு, இந்த வாடகை முடக்கம் கணிசமான சேமிப்பாக மாறும். இது அபுதாபியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியக் குடும்பங்களுக்கு நிம்மதியை அளித்து உள்ளது.



















