புதுடெல்லி: பிப்ரவரி 12-
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.
அவையில் ராகுல் காந்தி பேசியதாவது: ”நாம் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல்கள் நிறைந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு சீனா, ரஷ்யா மற்றும் பிற சக்திகள் சவால் விடுகின்றன.
போர் சகாப்தம் முடிந்துவிட்டதாக பிரதமர் மோடியும், பாதுகாப்பு ஆலோசகரும் சில நாள்களுக்கு முன் தெரிவித்தனர். ஆனால், நாம் போர் சகாப்தத்துக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உக்ரைன், காசா, மத்திய கிழக்கு நாடுகளில் போர்கள் நடைபெற்று வருகின்றன. ஈரானில் போர் அச்சுறுத்தல் இருக்கிறது. நாமும் ஆபரேஷன் சிந்தூரை சந்தித்தோம். டாலருக்கும், அமெரிக்க மேலாதிக்கத்துக்கும் சவால் விடப்படுகிறது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான போட்டியில், மிகவும் மதிப்புமிக்க ஒரு சொத்து இந்திய தரவுகள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா வல்லரசாக தொடர விரும்பினால், டாலரைப் பாதுகாக்க விரும்பினால், அதற்கான வழி இந்தியர்கள் தான்.
மக்கள் தொகை கூடுவது சுமை என்றும், பேரழிவு என்றும் பலர் சொல்கின்றனர். ஆனால், மக்கள் தொகை தான் நம்மிடம் இருக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து. அது நமது பலம். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து நீங்கள் (மத்திய அரசு) இந்தியாவை விற்றுவிட்டீர்கள்.
இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்று விட்டீர்கள். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது
உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கின்றனர்.
ஒன்று தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்க வழக்கு. மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ தொடர்பானது. எப்ஸ்டீன் தொடர்பான 30 லட்சம் கோப்புகள் வெளியாகி உள்ளன. ஒரு வேளை இண்டியா கூட்டணி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், பின்வரும் நிபந்தனைகளை முன்வைத்திருப்போம்.
எங்கள் மக்களின் தரவுகளை நீங்கள் (ட்ரம்ப்) பெற விரும்பினால், எங்களைச் சமமானவர்களாகக் கருதிப் பேசுங்கள். எங்களை உங்களது பணியாட்களைப் போல நடத்தாதீர்கள்.
இந்திய மக்களின் தரவுகளை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் பிரதமர் மோடி இந்தியாவின் எதிர்காலத்தைச் சரணடையச் செய்துள்ளார். இவ்வாறு ராகுல் பேசினார்.
இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “அவையில் ராகுல் காந்தி பேசியது அனைத்தும் பொய்.
அவரது பேச்சில் என்னென்ன பொய்கள் உள்ளனவோ, அவற்றை நீக்கக் கோருவோம். இது தொடர்பாக ராகுல் காந்தி ஆதாரங்களை அளிக்குமாறு பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் வழங்குவோம்” என்றார்.
Home செய்திகள் தேசிய செய்திகள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்” – மக்களவையில் ராகுல்காந்தி கடும் விமர்சனம்

















