
தருமபுரி: ஜூலை 28 –
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர கரையோர மக்களுக்கு கர்நாடக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடியில் இருந்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஆற்றில் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது.
தொடர் நீர்வரத்து காரணமாக கடந்த ஜூலை 25ம் தேதி நடப்பாண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர்வரத்து ஒரு லட்சத்து 500 கனஅடியாக உள்ளது. கால்வாய்க்கு 500 கனஅடி நீர் உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 500 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.