
லண்டன், ஜூலை 14- இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இதனால் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 387 ரன்களும், இந்தியா 387 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தை பென் டக்கெட் 0, ஜாக் கிராவ்லி 2 ரன்களுடன் தொடங்கினர். நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த பென் டக்கெட்டை, முகமது சிராஜ் வீழ்த்தினார். அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதையடுத்து ஆலி போப் களம்புகுந்தார்.
ஆனால் அவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 17 பந்துகளைச் சந்தித்த நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஆலி போப், சிராஜ் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 22 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராவ்லி, ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து களத்துக்கு வந்த ஹாரி புரூக் அதிரடியாக விளையாடினார். அவர் 19 பந்துகளில் 23 ரன்கள் (4 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) சேர்த்த நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார்.
அதன் பிறகு 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸும், ஜோ ரூட்டும் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.