Home மாவட்டங்கள் பெங்களூர் கர்நாடகத்திலும் நிலச்சரிவு அபாயம் 93 கிராமங்களுக்கு எச்சரிக்கை

கர்நாடகத்திலும் நிலச்சரிவு அபாயம் 93 கிராமங்களுக்கு எச்சரிக்கை

பெங்களூர்: ஜூலை 8-
வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்தியுள்ள சோகத்திலிருந்து இன்னும் மக்கள் வெளிவராத நிலையில், தற்போது கர்நாடகாவிலும் நிலச்சரிவு ஏற்படும் என்று 93 கிராமங்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வயநாடு என்றாலே நிலச்சரிவு என்கிற பெயர் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2024ல் இதே போல நிலச்சரிவு ஏற்பட்டு, அதில் சிக்கி 300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். இப்படி இருக்கையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 5க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். வயநாடுதான் இப்படி எனில், தற்போது கர்நாடகாவுக்கும் நிலச்சரிவு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அம்மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் (KSNDMC) நிலச்சரிவு குறித்த தீவிர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பிராந்தியத்தில் உள்ள மொத்தம் 39 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் அவற்றின் கீழ் வரும் 93 கிராமங்களுக்கு நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் (KSNDMC) செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் மழைப்பொழிவு அளவீடுகளைக் கொண்டு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி, குடகு, சிக்மகளூரு, சிவமோகா மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகமாக உள்ளது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவசியமின்றி மலைப்பாதைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், சிறிய அளவிலான மழை கூட பெரிய நிலச்சரிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வயநாடு சம்பவத்தை தொடர்ந்து தற்போது கர்நாடகாவுக்கும் நிலச்சரிவு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருப்பது, சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.