
புதுடெல்லி, பிப். 14- உத்தராகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கூறியதாவது: திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா அங்கீகரித்து கடந்த 1954-ம் ஆண்டு பஞ்ச சீல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் நாட்டின் முதல் பிரதமர் நேருவும், சீன பிரதமர் ஜோ என்லாயும் கையெழுத்திட்டனர். இந்தியா வடக்கு எல்லைப் பிரச்சினையை ஒரு முறையான ஒப்பந்தத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று கருதியே பஞ்ச சீல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் வர்த்தகத்துக்கு மட்டும்தான். எல்லைப் பிரச்சினைக்கு அல்ல என்பது சீனாவின் நிலைப்பாடாக உள்ளது. அதனால்தான் இன்று வரை இந்தியா – சீனா இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி பிரச்சினையாகவே உள்ளது.இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின் நமது எல்லை எங்குள்ளது என்பதை இந்தியா தீர்மானிக்க வேண்டும். கிழக்கு பகுதியில் பிரிட்டிஷ் இந்தியா -திபெத் இடையே 890 கி.மீ தூரம் மெக்மஹோன் எல்லை இருப்பது நேருவுக்கு தெரிந்திருக்கலாம். லடாக் பகுதியில் நமக்கு ஏதோ ஒரு உரிமை கோரல் இருந்ததும் அவருக்குத் தெரிந்திருக்கலாம். அதனால் அவர் பஞ்சசீல ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்பியிருக்கலாம். சீனா கடந்த 1949-ல் சுதந்திரம் பெற்றவுடன், அது பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற சிறப்புச் சலுகைகளை விட்டுக்கொடுத்ததுடன், அந்நிய நாட்டுப் பகுதிகளுக்கான கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. திபெத் உருவான பின் இப்பகுதியில் நிலைத்தன்மையை சீனா விரும்பியது. இதனால் இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவ்வாறு ஜெனரல் அனில் சவுகான் கூறினார். பஞ்ச சீலம் என்ற வடமொழி சொல்லுக்கு ஐந்து வகையான ஒழுக்கம் என அர்த்தம். பஞ்ச சீலம் என்பது புத்தமதத்தின் அடிப்படை கோட்பாடு. ஒரு நாட்டின் தனித்துவ கவுரவத்தையும், அரசாங்க அதிகாரத்தையும் மற்ற நாடுகள் மதிக்க வேண்டும். இரண்டு நாடுகளின் கொள்கை வேறுபட்டவையாக இருந்தாலும், சமாதானமாக வாழவேண்டும் என்று முடிவானது.

















