
கார்டிஃப், ஜூலை 18- இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கார்டிஃப் நகரில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 44 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 66, விராட் கோலி 65 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 31.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது.அதன் பின்னர் மேற்கொண்டு 55 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 8 விக்கெட்களையும் கொத்தாக தாரை வார்த்தது. 234 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களான பென் டக்கெட் 0, ஜேக்கப் பெத்தேல் 4 ரன்களிலும் நடையை கட்டினர். 8 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ஜோ ரூட் நடுவரிசை மற்றும் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து பொறுமையாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். நிலைத்து நின்று விளையாடிய ஜோ ரூட் 133 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கேப்டன் ஹாரி புரூக் 16, சேம் கரண் 26, ஜாஸ் பட்லர் 17, வில் ஜேக்ஸ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கஸ் அட்கின்சன் 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் குர்னூர் பிரார் 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஷிவம் துபே, அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ஜோ ரூட் தேர்வானார். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்தது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி நாளை (19-ம் தேதி) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
















