
மும்பை, மே 18- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் (சிஇஓ) மேலாண் இயக்குநருமான கே.கிருத்திவாசன், 2026-ம் நிதியாண்டில் ரூ.28.1 கோடியை ஊதியமாகப் பெற்றுள்ளார். அந்நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையின்படி, கிருத்திவாசனின் ஊதியம் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்னணி நிறுவனமான டிசிஎஸ், தனது ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 23,000-க்கும் அதிகமானோரைக் குறைத்துள்ள நிலையிலும், சிஇஓ-வின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2025-ம் நிதியாண்டின் இறுதியில் 6,07,979 ஆக இருந்த டிசிஎஸ் ஊழியர்களின் எண்ணிக்கை, 2026 நிதியாண்டின் இறுதியில் 5,84,519 ஆகக் குறைந்துள்ளது. 2026 நிதியாண்டில் கிருத்திவாசனின் மொத்த ஊதிய தொகுப்பில், அடிப்படைச் சம்பளமாக ரூ.1.67 கோடியும், இதர சலுகைகள் மற்றும் படிகளாக ரூ.1.43 கோடியும் அடங்கும். இதுதவிர, கமிஷன் தொகையாக மட்டும் அவர் ரூ.25 கோடியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவரது மொத்த வருவாய் ரூ.28.1 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், 2026 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, கிருத்திவாசன் டிசிஎஸ் நிறுவனத்தின் 11,232 பங்குகளைக் கைவசம் வைத்துள்ளார். நிறுவன வருடாந்திர அறிக்கையின்படி, அவரது இந்த ஊதியமானது டிசிஎஸ் ஊழியர்களின் சராசரி ஊதியத்தைக் காட்டிலும் 332.8 மடங்கு அதிகமாகும்.

















