
வாஷிங்டன், மே 25- அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் முடிந்துள்ளன. தான் அதிபரானது முதலே டிரம்ப் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக மோதலிலும் போரிலும் ஈடுபட்டு இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு முழுவதுமே வர்த்தக மோதலை கையில் எடுத்து இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தார். 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முதலில் வெனிசுலா மீது அம்மெரிக்க ராணுவம் நடவடிக்கை எடுத்து அதிபரையே சிறை பிடித்தது. இதன் பின்னர் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஈரான் மீது போரை தொடங்கியது. உலகமே இந்த ஈரான் போரின் தாக்கத்தை கடுமையாக சந்தித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் எல்பிஜி, பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மனநிலை சரியில்லை, உடல்நிலை சரியில்லை என பல்வேறு தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. டிரம்புக்கு தற்போது 79 வயதாகிறது, அடுத்த மாதம் 80 வயதை எட்ட போகிறார். இந்நிலையில் டிரம்புக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. இதனால் டிரம்பின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்திருக்கிறது. ஆனால் இது ஒரு வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என அமெரிக்க அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபராக இருக்கக்கூடிய நபரின் உடல்நிலை ஆண்டுக்கு இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அந்த தகவல்கள் வெளியிடப்படும் அந்த வகையில் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர் நான்காவது முறையாக நாளைய தினம் அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.




















