தவெக தேர்தல் பிரசாரக்குழுவின் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: ஜனவரி 21-
தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரக் குழுவை அண்மையில் அமைத்திருந்தார் தவெக தலைவர் விஜய். இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை பனையூரில் நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் பங்கீடு பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தேர்தல் பிரச்சாரக் குழுவை அண்மையில் அமைத்தார் விஜய். தவெக பிரச்சார குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் என் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, உயர்மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுதொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளும் குழுவை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்கள். இந்தக் குழு, 21.01.2026 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பிரசாரக் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். சட்டசபை பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்வதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். தவெக தேர்தல் பிரசாரக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரங்கள் கீழே:
தேர்தல் பிரசாரக் குழு விவரம்: 1. திரு. N.ஆனந்த் 2. திரு. ஆதவ் அர்ஜுனா B.A 3. திரு. K.A.செங்கோட்டையன் 4. திரு. A.பார்த்திபன் 5. திரு. B.ராஜ்குமார் DME 6. திரு. K.V.விஜய் தாழு 7.திரு. S.P.செல்வம் DCE B.திரு. K.பிச்சைரத்தினம் கரிகாலன் 9. திரு. M.செரவு மைதின் (எ) நியாஸ் 10. திருமதி J.கேத்ரின் பாண்டியன் Μ.Α.. Β.Εd முன்னதாக, வரும் சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அமைத்தார். அந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் அருண்ராஜ் தலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை மண்டலம் வாரியாக பிரித்து, பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து கருத்து கேட்கவுள்ளோம். அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். மேலும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து பொதுமக்களின் கருத்துகள் இணையதளம் வழியாகப் பெற முடிவு செய்துள்ளோம் என கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.