
திருநெல்வேலி: ஜனவரி 5-
தாமிரபரணி ஆற்றை சீரமைப்பதற்கான பரிந்துரையை வழங்க, மதுரை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிஷனர், நேற்று தன் ஆய்வு பணிகளை துவக்கினார்.திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றின் பல இடங்களில், சாக்கடை கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, செய்துங்கநல்லுாரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், 2018-ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் பல தீர்ப்புகள் வந்தும், முழுமையான பணிகள் நடைமுறைக்கு வரவில்லை.
இதையடுத்து, சாக்கடை கலப்பதை தடுக்க, ஆய்வு செய்து, பரிந்துரை அளிக்க, ராஜஸ்தானை சேர்ந்த நிபுணர் ராஜேந்திர சிங்கை, கமிஷனராக நீதிமன்றம் நியமித்தது. அதன்படி, அவர் இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
முதல் கட்டமாக, திருநெல்வேலி மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை ஆய்வு செய்தார்.
சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணியில் நேரடியாக கழிவுநீர் கலக்கும் இடங்களை பார்வையிட்டார்.அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘’நதி மிகவும் மாசடைந்திருப்பதை கண்டேன். 10 ஆண்டுகளில் பல கலெக்டர்கள் திட்டங்களை தொடங்கினாலும், மாற்றத்துடன் பணிகள் நின்றுள்ளன.‘ ‘மக்களிடம் நதி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். தாமிரபரணி துாய்மைப்பணி குறித்த முழு ஆய்வறிக்கையை, 20 முதல் 30 நாட்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளேன்,’’ என்றார்.















