Home மாவட்டங்கள் பெங்களூர் திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி – கனிமொழி

திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி – கனிமொழி

சென்னை: மே 25-
நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்வி அறிவாலயத்தின் அடித்தளத்தையே உலுக்கியுள்ள நிலையில், கட்சிக்குள் பெரிய அளவிலான விவாதங்களும் மறுசீரமைப்பு கோரிக்கைகளும் தற்போதே வெடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கட்சி நிர்வாகத்தை சுறுசுறுப்பாக்க மீண்டும் ‘செயல் தலைவர்’ (Working President) பதவியைக் கொண்டு வர வேண்டும் என்ற முணுமுணுப்பு திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் மூத்த நிர்வாகிகள் வரை பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
திமுக வரலாற்றில் ‘செயல் தலைவர்’ என்ற பதவி புதியதொன்றும் அல்ல. முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமாக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் இறுதிக்காலத்தில், உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது கட்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர ஒரு புதிய ஏற்பாடு தேவைப்பட்டது. அப்போதுதான் முதன்முறையாக திமுகவில் ‘செயல் தலைவர்’ பதவி உருவாக்கப்பட்டு, அப்போது மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. கருணாநிதி மறைவுக்குப் பின்னரே அவர் முறைப்படி தலைவராகப் பொறுப்பேற்றார்.
தற்போது தேர்தல் தோல்வி, தலைமைக் கழகத்தின் மீதான விமர்சனங்கள் மற்றும் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பணிச்சுமை ஆகியவற்றைக் காரணம்காட்டி, அதே பாணியிலான ஒரு தற்காலிக அல்லது நிரந்தர அதிகாரப் பகிர்வு கட்சிக்குத் தேவை என்ற குரல் எழுந்துள்ளது. உதயநிதி vs கனிமொழி: முட்டி மோதும் ஆதரவாளர்கள் இந்தச் செயல் தலைவர் பதவிக்கு தற்போதைய இளைஞரணிச் செயலாளரும், கட்சியின் முக்கிய முகமுமான உதயநிதி ஸ்டாலின் அல்லது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், மகளிர் அணித் தலைவியுமான கனிமொழி ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று இரு தரப்பு ஆதரவாளர்களும் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதம் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், கட்சியின் எதிர்காலம் இளைஞர்களிடம்தான் உள்ளது. உதயநிதி ஏற்கனவே துணை முதலமைச்சராகவும், இளைஞரணிச் செயலாளராகவும் அடிமட்டத் தொண்டர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர். எனவே, அவருக்கு செயல் தலைவர் பொறுப்பை வழங்கினால் மட்டுமே கட்சியைத் தீவிரமாக மறுசீரமைத்து, அடுத்த தேர்தலுக்குத் தயார்படுத்த முடியும் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
மறுபுறம், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கருணாநிதி காலத்துத் தொண்டர்களில் ஒரு பகுதியினர் கனிமொழியின் பெயரை பலமாக முன்மொழிகின்றனர். நாடாளுமன்றத்தில் கட்சியின் குரலாக ஒலிக்கும் கனிமொழிக்கு, தேர்தல் தோல்வி குறித்து நடந்த உள்கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் பெண் தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்களிடையேயும் அவருக்கு இருக்கும் நற்பெயர் கட்சியை மீண்டும் மீட்டெடுக்க உதவும் என்பது இவர்களின் கணக்கு. முக்கியமாக விஜய்யிடம் இருக்கும் பெண் சப்போர்ட் கனிமொழி மூலம் திமுகவிற்கு வரும் என்று அவர்கள் நம்புகின்றனர்.