திருச்சியில் பொங்கல் கொண்டாடிய அமித் ஷா; ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம்

திருச்சி: ஜனவரி 6-
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திருச்சியில் நேற்று பொங்கல் விழா கொண்டாடினார்.
தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக வந்த அமித் ஷா, நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
நேற்று காலை திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோவில்களில் தரிசனம் செய்தார். பின், திருச்சி மாவட்ட பா.ஜ., சார்பில், மன்னார்புரம் ராணுவ மைதானத்தில், மைதானத்தில் நடந்த ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ விழாவில் பங்கேற்றார். விழாவுக்கு வந்த அவருக்கு, பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சூரியனை வணங்கி, மேடையில் வைக்கப்பட்டு இருந்த பானையில் அரிசியை போட்டு, பொங்கல் விழாவை அமித் ஷா துவக்கி வைத்தார். மொத்தம் 1,008 பானைகளில் பா.ஜ.,வினர் பொங்கல் வைத்தனர்.
பொங்கல் விழாவில் பொதுமக்களை அமித் ஷா சந்தித்து, கையசைக்கும் வகையில், மேடையில் இருந்து 50 அடி அகலம், 30 அடி நீளத்திற்கு ‘ராம்ப்’ அமைக்கப்பட்டு இருந்தது. பொங்கல் விழாவுக்கு வந்த நாகரத்தினம் என்ற பெண் மயங்கி விழுந்ததால், அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.