தெலங்கானா முதல்வர் எச்சரிக்கை

ஹைதராபாத், டிச. 27- சினிமா பிரபலங்களின் பவுன்சர்கள் மற்றும் தனியார் மெய்க்காப்பாளர்கள் அத்துமீறி நடந்துகொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்தார். ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4-ம் தேதி இரவு திரையிடப்பட்டது. இதனை காண அப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி (35) உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் (9) படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அர்விந்த் நேற்று முன்தினம் ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீதேஜை சந்தித்து நலம் விசாரித்தார். சிறுவனின் குடும்பத்துக்கு அல்லு அர்விந்த் இதுவரை ரூ.11 கோடியும், தெலங்கானா அரசு தரப்பில் ரூ.25 லட்சமும், புஷ்பா பட இயக்குநர் சுகுமார் மற்றும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தலா ரூ.50 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டது.