சென்னை: ஆகஸ்ட் 12-
திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இன்று வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதோடு, தென்னிந்தியக் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் 15 வரை பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.















