நிதின் நபீன் பிஜேபி தேசிய தலைவராக பதவியேற்பு

புதுடெல்லி: ஜனவரி 20-
பாஜகவின் தேசியத் தலைவராக நிதின் நபீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் பாஜகவின் முக்கிய தலைவராக இருக்கும் நிதின் நபீன், இன்று பாஜக தலைவராகப் பதவியேற்கிறார். 45 வயதே ஆன நிதின் நபீன் தான் பாஜக தலைவராகும் இளம் தலைவராவார். அவர் யார்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம் பாஜகவின் தேசியத் தலைவரான நட்டாவின் பதவிக்காலம் 2024ல் முடிவடைய இருந்தது. இருப்பினும், சில காரணங்களால் அவரது பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தான் பாஜகவின் நிதின் நபீன் இப்போது தேசியத் தலைவராகத் தேர்வாகி இருக்கிறார்.
மூத்த அரசியல்வாதியான நிதின் நபீன், பாஜகவின் தேசியச் செயற்குழுத் தலைவராக இருக்கிறார். பீகார் மாநிலத்தில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக இருக்கும் அவர், பீகார் அரசில் மூத்த அமைச்சராகவும் இருந்தார். சிறந்த நிர்வாகத் திறமை, கட்சி அமைப்பு குறித்த ஆழ்ந்த புரிதல் காரணமாக பீகாரில் பாஜகவினரிடையே மரியாதை பெற்ற தலைவராக நிதின் நபீன் இருக்கிறார். ஒருங்கிணைந்த பீகாரில் ராஞ்சி நகரில் 1980 மே 23ம் தேதி பிறந்தவர் நிதின் நபீன்.. மறைந்த மூத்த பாஜக தலைவரும், பாட்னா மேற்கு தொகுதியின் நான்கு முறை பீகார் சட்டப்பேரவை உறுப்பினருமான கிஷோர் பிரசாத் சின்ஹா மற்றும் மறைந்த ஸ்ரீமதி மீரா சின்ஹா ​​ஆகியோரின் மகன் தான் இவர். அரசியல் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எடுத்த உடனேயே இவருக்கு உயர் பதவி கிடைத்துவிடவில்லை.
படிப்படியாகவே அரசியலில் உயர்ந்தார். பாட்னாவில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்த நிதின், டெல்லியில் தனது உயர் கல்வியை முடித்தார். தீப்மலா ஸ்ரீவஸ்தவா என்பவரை நிதின் நபீன் திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்த நிதின் நபீன், 2006ல் பாட்னா மேற்கு தொகுதியிலிருந்து பீகார் சட்டப்பேரவைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 முதல், பங்கிபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். 2006ல் ஆரம்பித்து 2010, 2015, 2020, 2025 என வரிசையாக 5 தேர்தல்களில் வென்றார். பீகார் அமைச்சரவையில் சாலை கட்டுமானம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி, சட்டம் எனப் பல முக்கிய பொறுப்புகளைக் கையாண்டு வந்துள்ளார். சட்டமன்றப் பணிகளுக்கு இணையாக, அவர் கட்சிப் பணிகளிலும் தீவிரமாகவே ஈடுபட்டார். தேசிய மற்றும் மாநில அளவில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். சிக்கிம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் முக்கியமான அமைப்புப் பொறுப்புகளையும் அவர் நிர்வகித்துள்ளார். அதில் சிறப்பாகச் செயல்பட்டதாலேயே அவருக்குக் கடந்த டிசம்பர் மாதம் தேசிய அளவில் பதவி தரப்பட்டது. டிசம்பர் 14ம் தேதி அவர் பாஜக செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் இந்தச் சூழலில் தான் அவர் பாஜக தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் பாஜக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், நிதின் நபீனை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அவரது பெயரிலேயே 30+ வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இன்று காலை 11.30 மணியளவில் பாஜக தலைவராகப் பதவியேற்கிறார்.
45 வயதான நிதின் நபீன், இந்தப் பதவியை ஏற்பதன் மூலம் மிக இளைய வயதில் பாஜக தலைவராகப் பதவியேற்றவர் பெயரைப் பெறுகிறார். மேலும், நிதின் பதவியேற்பு பாஜக தலைமையில் ஏற்படும் தலைமுறை மாற்றத்தைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளம் வயது இதற்கு முன்பு தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2014இல் பாஜக தேசியத் தலைவராகப் பதவியேற்றார். அப்போது அவருக்கு வயது 49.. இப்போது அமித் ஷாவை விடவும் இளைய வயதில் நிதின் நபீன் பாஜக தலைவர் பதவிக்கு வந்துள்ளார். பாஜகவின் இளம் தலைவராகக் கருதப்படும் நபீனுக்கு இந்த பதவி தரப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.