
புதுடெல்லி, ஜூலை 22- உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சோனம் வாங்சுக்கை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 28ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 18-ம் தேதி மத்திய அரசின் சப்தர்ஜங் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கிறார். இந்நிலையில், வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரி அவரது மனைவி கீதாஞ்சலி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனது கணவரின் உடல்நிலை குறித்து முரண்பட்ட அறிக்கை வெளியிடப்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து கீதாஞ்சலி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதில் ஆட்சேபணை இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சோனம் வாங்சுக்கை மேல் சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள மெதாந்தா மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். இது அவருடைய அடிப்படை உரிமையை பாதுகாக்கும்.













