நெரிசல் – 3 பேர் பலி 50 பேர் காயம்

ஒடிசா: ஜூன் 29-
பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்துள்ளனர். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இறந்தவர்கள் பிரேமகாந்த மொஹந்தி (வயது 80), பசந்தி சாஹூ (வயது 36) மற்றும் பிரபாதி தாஸ் (வயது 42) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பூரி மாவட்ட தலைமையக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் பூரி ஜெகன்நாதர் கோவில் அமைந்துள்ளது. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ரத யாத்திரை திருவிழா நடைபெறுது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் ரத யாத்திரை திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவில், ஒடிசா மாநிலம் மற்றும் இன்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ரத யாத்திரையில் பங்கேற்று சென்றனர்.
அப்போது, பூரி ஜெகன்நாதர் கோயில் அருகே உள்ள ஸ்ரீ குண்டிகா கோயில் அருகே ரதங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது, சுவாமியை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டனர். இதில், எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதனால், சில பக்தர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். மேலும், பக்தர்கள் இடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசல் உண்டானது. இதனால் ஆபத்தை உணர்ந்த பக்தர்கள் ஆங்காங்கே சிதறி ஓடினார்.


அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். பின்னர், வெகு நேரத்துக்கு பிறகே பக்தர்கள் கூட்ட நெரிசல் கட்டுக்குள் வந்தது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பார்த்தபோது, 3 பக்தர்கள் கீழே விழுந்து கிடந்தனர். போலீசார் அவர்களை எழுப்ப முயன்றபோது, அவர்கள் எழுந்திரிக்கவில்லை. இதில், இரு பெண்கள் உள்பட மூன்று பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
விசாரணையில் உயிரிழந்தவர்கள் பிரபாதி தாஸ், பசந்தி சாஹு ஆகிய இரண்டு பெண்களும், பிரேமகாந்த் மொஹந்தி என்ற முதியவரும் என்பது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் ஒடிசாவின் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ரத யாத்திரைக்காக பூரிக்கு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், அவர்களது சடலம் மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையில் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்று தெரிந்தும் போதுமான ஏற்பாடுகளை போலீசார் செய்யவில்லை. எனவே, இதற்கு போலீசார் முறையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளாததே காரணம் என்று ரத யாத்திரையில் பங்கேற்க வந்த பக்தர்கள் குற்றம் சாட்டினர்.