
சண்டிகர், ஆக. 16- முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கும் பஞ்சாபில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திராவின் கொலை சதி வலையில் குற்றஞ்சாட்டப்பட்டு, துாக்கிலிடப்பட்ட கெஹர் சிங்கின் மகன் சத்வந்த் சிங். இவர் தான் எங்கள் கட்சியின் பஸ்சி பதானா தொகுதி வேட்பாளர் என, அகாலிதளம் வாரிஸ் தே என்ற மாநில கட்சி அறிவித்துள்ளது. இது, பஞ்சாப் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அகாலிதளம் வாரிஸ் தே என்ற இந்த கட்சி, காலிஸ்தான் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கட்சி. சீக்கிய மதத்திற்காகவும், பஞ்சாபின் உரிமைகளுக்காகவும், தியாகம் செய்ததாக கருதப்படும், குடும்பங்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் முன்னுரிமை அளிக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே, இந்திரா கொலை வழக்கில் துாக்கிலிடப்பட்ட கெஹர் சிங்கின் மகன் சத்வந்த் சிங்கிற்கு, பதேகர் சாஹிப்பின் பஸ்சி பதானா தொகுதியில் போட்டியிட, ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் எப்படி இந்தியாவிற்குள் வந்தனர் என, உளவுத் துறை விசாரிக்கிறது. ஒரு காலத்தில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பஞ்சாப், இப்போது அமைதியாக உள்ளது. ஆனால், வரும் சட்டசபை தேர்தல் இந்த அமைதியை சீர்குலைத்து விடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.













