Home செய்திகள் தேசிய செய்திகள் பான்மசாலா விளம்பரம்: ஷாருக்கான், அஜய் தேவ்கானுக்கு நோட்டீஸ்

பான்மசாலா விளம்பரம்: ஷாருக்கான், அஜய் தேவ்கானுக்கு நோட்டீஸ்

மும்பை, ஆக. 16- பான் மசாலாவை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு மஹாராராஷ்டிரா மாநில உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மஹாராஷ்டிராவில் உணவு பாதுகாப்பு ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டே பதவியேற்ற பிறகு, அந்த துறை வேகம் பெற்றுள்ளது. பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம், விஐபிக்கு சொந்தமானது என்று எந்த நிறுவனமும் அவரின் சோதனைக்கு தப்பவில்லை. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் தடை செய்யப்பட்ட பான்மசாலாவை மறைமுகமாக ஊக்கப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட விளம்பரத்தில் நடித்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெரப் ஆகியோருக்கு உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மூன்று நடிகர்களும், கடந்த 2024ம் ஆண்டு பான் மசாலா நிறுவனம் ஒன்று விற்பனைக்கு கொண்டு வந்த ஏலக்காயை விளம்பரப்படுத்தி இருந்தனர்.இது தொடர்பாக அவர்களுக்கு துக்காராம் முண்டே அனுப்பிய நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது: விளம்பரத்தை ஆய்வு செய்த போது, மாநிலத்தில் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றுக்கு தடை செய்யப்பட்ட பான்மசாலா தொடர்புடைய நிறுவனத்தை ஊக்குவிப்பது போல் அது அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் ஏலக்காய் விளம்பரம், பான்மசாலா உடன் தொடர்புபடுத்தும் வகையில் உள்ளது. இது நுகர்வோரை தவறாக வழிநடத்துவதுடன், மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பொருளை மறைமுகமாக ஊக்குவிப்பது போல் உள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை அபராதத்துடன், விளம்பரம் தடை செய்யப்படும். மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.