
பெங்களூரு: ஆக. 15-
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு வரலாற்றுச் சான்றை விட்டுச் செல்வேன் என்று கூறியுள்ள முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மாநிலத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு நீலவரைபடத்தை (ப்ளூ பிரிண்ட்) வெளியிட்டு, மாநில முன்னேற்றத்திற்காகப் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக ஏ.ஐ. அக்ஷர அபியான் மற்றும் கோடிங் குருகுலம், முதலமைச்சர் வேலைவாய்ப்பு சங்கல்ப் திட்டம், யுவ உத்யோக் சேது திட்டம், உத்யோக் நிதி திட்டம், முதலமைச்சர் ரைத சைதன்யா திட்டம், ரைத மித்ரா திட்டம், கிராமப்புற மாணவர்களுக்கான உதவிக்கரம் (சஹாயஹஸ்தா) திட்டம் எனப் பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள ஃபீல்ட் மார்ஷல் மானெக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் இன்று 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாநில மக்களுக்குச் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துப் பேசிய அவர்அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் துறைகளில் மாநிலத்தை ஒரு முன்மாதிரியாக மாற்றும் நோக்கில் பல புரட்சிகரமான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். புதிய திட்டங்களின் அறிவிப்புடன், 5 உத்தரவாதத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் தொலைநோக்கு நீலவரைபடத்தையும் அவர் வெளியிட்டார்.
மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பிலிருந்தே செயற்கை நுண்ணறிவு கல்வியை அறிமுகப்படுத்தும் ‘ஏ.ஐ. அக்ஷர அபியான் மற்றும் கோடிங் குருகுலம்’ திட்டத்தை அறிவித்து, இலவச கோடிங் குருகுலம் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் ஏ.ஐ. கோடிங் திறனைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நாட்டின் முதலாவது அரசுத் துறை ஏ.ஐ. பல்கலைக்கழகம் பெங்களூரில் நிறுவப்படும். ஜனவரி 2027-க்குள் ஏ.ஐ. சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்படும். இதனுடன் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏ.ஐ. மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மாநிலத்தில் அரசுப் பணியிடங்களை நிரப்பும் ‘முதலமைச்சர் வேலைவாய்ப்பு சங்கல்ப்’ திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்த அவர், வேலை தேடும் இளைஞர்களின் நிம்மதியான எதிர்காலத்திற்காக இத்திட்டத்தைத் தொடங்குகிறேன். இத்திட்டத்தின் கீழ் அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதே எங்களின் முதன்மை முன்னுரிமை. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் முதற்கட்டமாக 72 ஆயிரம் முக்கியப் பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் அனைத்துப் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார்.
இளைஞர்களுக்காக ‘யுவ உத்யோக் சேது’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்குக் கொண்டு சேர்க்க ஒருமித்த மென்பொருள் உருவாக்கப்படும். இந்த மென்பொருள் வேலை தேடுபவர்கள், வேலை வழங்குபவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஒரே தளத்திற்குக் கொண்டு வரும் என்றார். 100 அரசு ஐ.டி.ஐ. மையங்கள் வேலைவாய்ப்பு மையங்களாக மாற்றப்படும். தனியார் தொழிற்சாலைகளின் பங்களிப்புடன் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்.
மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய 10 மாவட்டங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிலதிபர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும் ‘உத்யோக் நிதி’ திட்டம் தொடங்கப்படும். ஒவ்வொரு புதிய வேலைவாய்ப்பிற்கும் மாதம்தோறும் தலா 2,500 ரூபாய் ஊக்கத்தொகையை அரசே வழங்கும். இந்த வசதி அடுத்த 2 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இதன் மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.
விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கும் ‘முதலமைச்சர் ரைத சைதன்யா’ திட்டத்தை அறிவித்துள்ள முதலமைச்சர் டி.கே. சிவகுமார், விவசாயிகளின் அனுபவத்தோடு நவீன தொழில்நுட்பத்தின் சக்தியை இணைக்க இத்திட்டம் உதவும் என்றார். ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் மூலம் பயிர் கணக்கெடுப்பு நடத்தப்படும். நேரடித் தரவுகளின் அடிப்படையில் விவசாயிகளுக்குப் பயிர் பூச்சி மற்றும் நோய் தாக்குதல், மற்றும் சந்தையின் துல்லியமான தகவல்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மேலும் இத்தகவல்கள் விவசாய சந்தையின் டிஜிட்டல் அமைப்புடன் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விவசாயிகள் விவசாய இயந்திரங்களைக் வாடகைக்கு எடுக்கும் வாய்ப்பை வழங்கும் ‘ரைத மித்ரா’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் டிராக்டர், ரோட்டவேட்டர், டில்லர் மற்றும் விதை தெளிப்பான் ஆகியவற்றை வாடகைக்கு பெறலாம். 3 ஏக்கர் அல்லது அதற்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வாடகைக் கட்டணத்தில் 50% மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் விவசாய இயந்திரங்கள் சிறு விவசாயிகளுக்கும் எட்டும் வகையில் செய்யப்படும் என்றார்.
1 முதல் 10-ஆம் வகுப்பு வரை கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குப் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை படிப்புகளின் சேர்க்கையில், தற்போதுள்ள 15% கிராமப்புற இடஒதுக்கீட்டிற்குள் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றார்.
மேகதாட்டு திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அறிவித்துள்ளார். மாநிலத்தின் 112 முக்கிய பாசன திட்டங்களுக்கு ரூ. 16,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பெங்களூரில் ரவுடி ஒழிப்புப் படை அமைப்பதோடு, 5 புதிய காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார். மாநிலத்தின் ஒவ்வொரு நகரம் மற்றும் பெருநகரங்களில் வெளிவட்டச் சாலை மற்றும் மொபிலிட்டி கிரிட் மேம்பாடு செய்யப்படும். பெங்களூரு பிசினஸ் காரிடார் ரிங் ரோட்டிற்கு புத்துயிர் அளிப்பதோடு, ‘பியாண்ட் பெங்களூரு’ திட்டத்தின் கீழ் 5 சர்வதேச தொழில்நுட்ப மையங்கள் நிறுவப்படும். தொட்டபள்ளாப்பூரில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு, ரூ. 20,000 கோடி முதலீடு மற்றும் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைந்த விலையில் வாகனக் காப்பீடு பெற ‘கர்நாடக மாநில மோட்டார் வாகனக் காப்பீட்டுக் கழகம்’ நிறுவப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.













