
சென்னை: அக். 29-
தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜக.வின் பகல்கனவு, திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என்றும் 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி’ எனும் பெயரில் நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2019-ம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும், மகத்தான வெற்றிகளை பெற்றுவருகிறோம்.
நமது வெற்றிகள் எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம்.
இதை ஆணவத்தில் சொல்லவில்லை. உங்கள் உழைப்பின் மீதும், ஆட்சியின் சாதனைகள் மீதும், தமிழக மக்கள் மீதும் வைத்துள்ள நம்பிக்கையில் சொல்கிறேன்.
இந்தியாவில் எந்த மாநில அரசும் நம் அளவுக்கு சாதனைகள் செய்திருக்கமாட்டார்கள். மீதமுள்ள சில வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றி தருவோம்.
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வால்தான், பாஜகவின் பாசிச ஆட்சிக்கு அடிபணியாமல் எதிர்த்து நிற்கிறோம். இதனால்தான் பாஜக.வுக்கு நம் மீது கோபம் வருகிறது. அதனால்தான் பல்வேறு சூழ்ச்சிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இங்கு உங்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்கும்போது, உங்கள் முகங்களில் உதயசூரியனை நான் காண்கிறேன். அதை தமிழக மக்களின் இதயசூரியனாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்குதான் உள்ளது.
இந்த கூட்டத்துக்கு பின்பு அனைவரும் ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்று முன்னெடுக்க வேண்டும்.
எனது வாக்குச் சாவடியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்று, அங்கு நமது வெற்றியை உறுதி செய்வதற்கான பரப்புரையில் நிச்சயமாக நான் ஈடுபடப்போகிறேன். அதேபோல், ஒவ்வொரு ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளரும், தனக்குகீழ் வரும் ஒவ்வொரு பூத்துக்கும் தனித்தனி கூட்டங்களை தினமும் மாலையில் நடத்த வேண்டும்.
இந்த கூட்டங்களில் அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட சார்பு அணி நிர்வாகிகளில் இருந்து, மாநில நிர்வாகிகள் வரை அனைத்து நிர்வாகிகளும், தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு டார்கெட் நிர்ணயித்து கொள்ளவேண்டும். அதன் விவரங்களை மாவட்டச் செயலாளர் மூலமாக எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.















