பிஜேபியின் புதிய தேசிய தலைவர் யார் – இன்று மாலை முக்கிய அறிவிப்பு

புதுடெல்லி: ஜனவரி 19-
பாஜக புதிய தேசியத் தலைவரை தேர்வு செய்ய இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். இப்போது பாஜக தேசியச் செயல் தலைவராக இருக்கும் நிதின் நபீன் என்பவரே புதிய பாஜக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவின் தலைவராகக் கடந்த 2020ம் ஆண்டு முதல் ஜே. பி. நட்டா இருந்து வருகிறார். பொதுவாக பாஜகவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் மாற்றப்படுவார். ஆனால், 2024 லோக்சபா தேர்தல் காரணமாக முதலில் நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில காரணங்களால் நட்டாவே பாஜக தேசியத் தலைவர் பதவியில் தொடர்ந்தார்.
இந்தாண்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், பாஜக புதிய தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்தது. அதன்படி பாஜக புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று வேட்புமனு தாக்கல் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மாலை 5 மணி வரை மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் மாலை 6 மணி வரை வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவை என்றால் நாளைய தினம் வாக்குப்பதிவு நடக்கும்.. ஒரே ஒரு நபர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தால் வாக்குப்பதிவு எதுவும் இல்லாமல் அவரே பாஜகவின் புதிய தேசியத் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார்.
இப்போது பீகார் அமைச்சரான நிதின் நபின், பாஜக தேசியச் செயல் தலைவராக இருக்கும் நிலையில், அவரே தலைவர் பதவிக்கும் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.. இன்று மாலை அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் உடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வார் என்பதால் அவரே புதிய தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது..
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1980 மே 23ல் பிறந்தவர் நிதின் நபின்.. இவர் மறைந்த பாஜக தலைவர் நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார். அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த நிதின் நபின், தந்தையின் மறைவுக்குப் பிறகே அரசியலுக்கு வந்தார். கடந்த 2006ல் பாட்னாவின் பாங்கிபூர் தொகுதியில் வென்று பீகார் சட்டசபைக்கு முதல்முறையாகத் தேர்வானார். தொடர்ந்து அங்கு 4 நான்கு சட்டசபைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்பு அவர், பாஜக இளைஞர் அணியின் தேசிய பொதுச் செயலாளர், பீகார் பாஜக மாநிலத் தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். மேலும், சிக்கிம், சத்தீஸ்கரில் தேர்தல் பணிகளையும் கவனித்து இருக்கிறார்.