பி.டி.உஷாவின் கணவர் சீனிவாசன் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்

கோழிக்கோடு: ஜனவரி 30-
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினருமான பி.டி.உஷாவின் கணவர் வி.சீனிவாசன் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். இந்த சம்பவம் விளையாட்டு மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பய்யோலியில் உள்ள அவர்களது வீட்டில் வி.சீனிவாசன் வசித்து வந்தார். வியாழக்கிழமை நள்ளிரவில் அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
வீட்டில் மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
டெல்லியில் இருந்து திரும்பும் உஷா நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகப் பி.டி.உஷா டெல்லியில் இருந்தார். கணவர் இறந்த செய்தி கேட்டு அவர் உடனடியாக விமானம் மூலம் கேரளா திரும்பிக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடி இரங்கல் :
சீனிவாசன் மறைவு செய்தி அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி, பி.டி.உஷாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர், இந்தத் துயரமான இழப்பைத் தாங்கிக்கொள்ளும் தைரியம் உஷாவிற்குக் கிடைக்கப் பிரார்த்திப்பதாகக் கூறினார். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த சீனிவாசன்? மலப்புரம் மாவட்டம் பொன்னானியைச் சேர்ந்த வி.சீனிவாசன், இளமைப் பருவத்தில் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் ஒரு முன்னாள் கபடி வீரர் ஆவார். மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (CISF) அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1991 ஆம் ஆண்டு பி.டி.உஷாவைத் திருமணம் செய்து கொண்டார்.

உஷாவின் விளையாட்டு வாழ்க்கையிலும், அதன் பின்னர் அவர் விளையாட்டு நிர்வாகத் துறைக்கு வந்தபோதும், சீனிவாசன் அவருக்குப் பெரும் உறுதுணையாக இருந்தார். பி.டி.உஷா பொது வாழ்வில் பிஸியாக இருந்தபோதும், சீனிவாசன் குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டு அவருக்கு ஆதரவாக நின்றார். பொதுவெளியில் அதிகம் தோன்றாத அமைதியான சுபாவம் கொண்டவர்.