சென்னை: ஜன.29- மதுராந்தகம் அருகிலுள்ள கருங்குழியில் இருந்து பூஞ்சேரி வரை 32 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் மூலம் டெண்டர் கோரியிருப்பது வரவேற்கத்தக்க முடிவாக அமைந்துள்ளது.
தமிழகத்தின் மக்கள்தொகை 7 கோடி அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் படிப்பு போன்ற காரணங்களுக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள் குவியும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை நகரின் மக்கள்தொகை ஒரு கோடியை எட்டியுள்ளது. இதுதவிர, அண்டை மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் தினந்தோறும் பல லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த காரணங்களால், தற்போதுள்ள சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் போதாமல் சென்னை திணறும் நிலையே இருந்து வருகிறது. குறிப்பாக, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதி தென்மாவட்டங்களில் இருந்து வந்து செல்வோரின் நுழைவாயிலாக இருப்பதால் எத்தனை மாற்றங்கள் செய்தாலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
வார இறுதி நாட்களில் பலர் சென்னையில் இருந்து வெளியூர் செல்வதும், மீண்டும் சென்னை திரும்புவதும் அதிகரித்து வருகிறது. பண்டிகை காலங்களில் 10 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியேறுவதும் மீண்டும் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதுமாக இருப்பதால் அத்தகைய நாட்களில் சென்னை நகரின் நுழைவுப்பகுதிகள் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.