
புரி, ஜூலை 7- புரி ஜெகந்நாதருக்கு நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. கடந்த 1460-ம் ஆண்டில் அப்போதைய கலிங்க மன்னர் கபிலேந்திர தேவா, தக்காணத்து போர்களில் வெற்றி பெற்று தங்க நகைகள், வைரங்களுடன் ஒடிசா திரும்பினார். இந்த தங்க நகைகள், வைரங்களை புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார். அப்போது முதல் புரி ஜெகந்நாதர் கோயிலில் சுனா பேஷா என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆரம்ப காலத்தில் சுமார் 138 தங்க நகைகளால் ஜெகந்நாதருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை 20 முதல் 30 ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஜூன் 27-ம் தேதி ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை தொடங்கியது. இந்த ரத யாத்திரையின் 10-வது நாளான நேற்று சுனா பேஷா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஜெகந்நாதர் மற்றும் பால பத்ரர், சுபத்ரா தேவிக்கு 208 கிலோ தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். புரி ஜெகந்நாதருக்கு தங்க நகை, தங்க பாதங்கள், அலங்காரத்தை மேற்கொள்ள ஒரு மணி நேரத்துக்கு மேலானது என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.