
புதுடெல்லி / கராகஸ்: ஜூன் 27-
வெனிசுலா பூகம்பத்தில் இதுவரை 589 பேர் உயிரிழந்துள்ளனர். 49,500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம் 2 விமானங்களில் 35 டன் நிவாரணப் பொருட்களை வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
தென்அமெரிக்க நாடான வெனிசுலாவின் யாராகுய் மாகாணத்தின் சான்பெலிப், யுமரே நகரங்களை மையமாகக் கொண்டு நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த 2 பூகம்பங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவானது.
இதன்காரணமாக யாராகுய், லா குய்ரா உட்பட 7 மாகாணங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் கராகஸில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெனிசுலா ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு படைப் பிரிவுகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தென்அமெரிக்க நாடுகளின் ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் இணைந்துள்ளனர்.
இதுவரை 589 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4,300-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பூகம்பம் நேரிட்ட பகுதிகளில் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்ய வெனிசுலா அரசு சார்பில் சிறப்பு இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையத்தில் 49,500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று பதிவிடப்பட்டு உள்ளது. அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெனிசுலாவின் மொத்த மக்கள் தொகை 2.86 கோடி. இதில் சுமார் 70 லட்சம் பேர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கராகஸில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் வீடு, உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்தியாவின் ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ – இந்நிலையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ தொடங்கப்பட்டு உள்ளது. (‘அமிஸ்டாட்’ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ‘நட்பு’). இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘இந்திய விமானப் படையின் சி17 ரக சரக்கு விமானங்கள் மூலம் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உட்பட 35 டன் நிவாரணப் பொருட்கள் வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.


















