
புதுடெல்லி:டிசம்பர் 29- பிஜி தீவு முதல் காசி வரை மக்களின் மனங்களை ஒன்றிணைக்கிறது தமிழ் மொழி என்று ‘மனதின் குரல்’ வானொலி உரையில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற தலைப்பில் மாதம்தோறும் கடைசி வாரம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 129-வது மற்றும் இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றியதாவது: சில நாட்களில் 2026-ம் ஆண்டு தொடங்குகிறது. ஆபரேஷன் சிந்தூர், வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா, சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் சென்றது, பிரயாக்ராஜ் மகா கும்பமேளா, அயோத்தி ராமர் கோயில் கொடியேற்றம் மற்றும் விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது, மகளிர் கிரிக்கெட் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது. பார்வை மாற்றுத் திறன் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையை இந்திய வீராங்கனைகள் வென்றது என கடந்த ஓராண்டில் நிகழ்ந்த அனைத்து சாதனைகளும் என் மனதில் நிழலாடுகின்றன.
ஜனவரி 12-ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு ‘தேசிய இளைஞர் தினம்’ கொண்டாடப்படுகிறது. அன்று 2-வது ஆண்டு ‘விக்ஷித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல்’ சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க நானும் ஆர்வமாக இருக்கிறேன். அப்போது, புதுமை, உடல்நலம், ஸ்டார்ட்-அப், வேளாண்மை உட்பட எந்த துறை சார்ந்த யோசனைகளையும் இளைஞர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
அந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய விநாடி-வினா நிகழ்ச்சி சில நாட்கள் முன்பு நடந்தது. இதில் 50 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர். கட்டுரைப் போட்டியும் நடந்தது. தமிழகம் முதலிடம் என பாராட்டு இதில் மாணவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இந்த போட்டியில் தமிழகம் முதல் இடமும், உத்தர பிரதேசம் 2-ம் இடமும் பிடித்தன. கடந்த மாதம் பிஜி தீவின் ராக்கீராக்கீ பகுதி பள்ளியில் முதல்முறையாக தமிழ் தினம் கொண்டாடப்பட்டது. மேடையில் குழந்தைகள் தங்கள் மொழியின் பெருமை குறித்து தங்கு தடையின்றி உரையாற்றினர். குழந்தைகள் தமிழில் கவிதைகளை படித்தனர். சொற்பொழிவு நிகழ்த்தினர். தங்களது கலாச்சாரத்தை தன்னம்பிக்கையோடு மேடையில் வெளிப்படுத்தினர்.















