
சென்னை: ஜூலை 16 –
”மதுரையில் ஆகஸ்ட் 25ல் த.வெ.க.,2வது மாநாடு நடைபெறும். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்” என அக்கட்சி தலைவரும், நடிருமான விஜய் தெரிவித்துள்ளார்.
மதுரை பாரப்பத்தி பகுதியில் 237 ஏக்கர் பரப்பளவில் த.வெ.க., 2வது மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. வாகன பார்க்கிங்க்கு 217 ஏக்கர் ஒதுக்கப்பட்டு மாநாடுக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. மாநாடு நடத்துவதற்காக இன்று (ஜூலை 16) பந்தகால் நடப்பட்டது.
இதில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்.
தற்போது, மதுரையில் ஆகஸ்ட் 25ல் த.வெ.க.,2வது மாநாடு நடைபெறும் என அக்கட்சி தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.
தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி. இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
தென் மாவட்டங்களில் பலத்தை நிரூபிக்க விஜய் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். மதுரையில் முதல்வர் ரோடுஷோ தொடங்கி, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஹிந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாடு என மதுரையில் தொடர்ச்சியாக அனைத்து கட்சியினரும் விழா நடத்தி வருகின்றனர். தற்போது விஜய் மாநாடு நடத்த உள்ளார். மதுரையை குறிவைத்து அனைத்துக் கட்சியும் மாநாடு நடத்தப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி வருகிறது. கடந்தாண்டு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் த.வெ.க.,வின் முதல் மாநாடு நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.