ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம்விசாரணையில் அதிர்ச்சி தகவல்

சென்னை: ஜூலை 31 –
கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. தண்டவாளத்தில் இருந்த போல்ட், நட்டுகள் அகற்றப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு உள்ளானது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி இந்த பயங்கரமாக விபத்து ஏற்பட்டது. 75 கி.மீ வேகத்தில் வந்த ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அதில் சுமார் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே கிடந்தன. இந்த விபத்தில் 19 பயணிகள் படுகாயமடைந்த நிலையில், ரயில்வே இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்தது. ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வருவதற்காக பிரதான பாதையில் வருவதற்காக, பச்சை நிற சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அருகே வந்தபோது, மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு, லூப் லைனில் சென்று, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி செயலாக இருக்கலாம் என்று விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தண்டவாளத்தில் இருந்த போல்ட்கள் மற்றும் நட்டுகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாக விபத்துக்கு காரணமாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம் சவுத்திரி கூறுகையில், “பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது எந்தவொரு உபகரணங்கள், சிக்னல்கள் திடீர் செயலிழப்பு காரணமாக அல்ல, மாறாக தண்டவாளத்தை மாற்றி அமைத்ததுதான் என்பது தெரிய வந்துள்ளது. அதுவும் வலுக்கட்டாயமாக மாற்றியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்தது.
குறிப்பாக தண்டவாள இண்டர்லாக் அமைப்பின் கூறுகளை குற்றவாளிகள் வலுக்கட்டாயமாக அகற்றியதால் ஏற்பட்ட நாசவேலையின் விளைவாகும் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த விபத்து நாசவேலை பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் பாக்மதி ரயிலின் லோகோ பைலட் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்துவதில் சிறந்த விழிப்புணர்வையும், உடனடித் தன்மையையும் காட்டினார். இது ரயிலின் வேகத்தையும் அதன் விளைவாக ஏற்பட்ட மோதலின் தாக்கத்தையும் குறைத்தது’ எனத் தெரிவித்துள்ளார்.