Home மாவட்டங்கள் பெங்களூர் ரவுடி கொலை வழக்கில் குற்றவாளி சுட்டு பிடிப்பு

ரவுடி கொலை வழக்கில் குற்றவாளி சுட்டு பிடிப்பு

சிமோகா: செப்.7-
சிமோகாவில் பிரபல ரவுடி ‘குள்ளி’ கிரண் படுகொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் காலில், இன்று காலை துங்காநகர் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு அதிரடியாகக் கைது செய்தனர்.
ரவுடி ‘குள்ளி’ கிரண் கொலை வழக்கில் உமேஷ் நாயக் (என்ற டியோ) என்பவரைக் கைது செய்து அழைத்து வரும்போது, அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காகத் தாக்குதல் நடத்த முயன்றார். இதனையடுத்தே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துங்காநகர் காவல் எல்லைக்குட்பட்ட ராமினகொப்பா கிராமத்தில் ரவுடி ‘குள்ளி’ கிரண் நேற்று படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான உமேஷ் நாயக், சிமோகா நகரின் எல்லையிலுள்ள என்.ஆர்.புரா சாலையில் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துங்காநகர் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு அவரைக் கைது செய்தனர்.
கைது செய்து அழைத்து வரும்போது, கழிவறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி ஜீப்பில் இருந்து கீழே இறங்கிய உமேஷ் நாயக், துங்காநகர் காவல் நிலையக் காவலர் தம்மண்ணாவைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது துங்காநகர் காவல் ஆய்வாளர் குருராஜ் எச்சரித்தும், அதைப் பொருட்படுத்தாமல் குற்றவாளி ஓட முயன்றதால், உமேஷின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
காயமடைந்த உமேஷ் நாயக் உடனடியாக மெக்கான் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) நிகில் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
எஸ்.பி. நிகில் அளித்த விளக்கம்:
இச்சம்பவம் குறித்துத் தகவல் அளித்த எஸ்.பி. நிகில், “நேற்று நடந்த கிரண் கொலை வழக்கில் உமேஷ் என்பவரைக் காவல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து அழைத்து வரும்போது, அவர் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறினார். அப்போது காவலர் தம்மண்ணாவைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றார். உடனே காவல் ஆய்வாளர் குருராஜ் எச்சரித்து, வானத்தை நோக்கிச் சுட்டுச் சரணடையுமாறு உத்தரவிட்டார். அதையும் மீறி தப்பியோட முயன்றதால், அவரது இடது காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
முன்னதாக நேற்று கொலை நடந்த பிறகு பேசிய எஸ்.பி, “கொல்லப்பட்ட கிரண் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் சமீபகாலமாகச் சிமோகாவில் இருப்பதில்லை. ஊரை விட்டுச் செல்வதும் வருவதுமாக இருந்துள்ளார். அவரது கூட்டாளிகளே இக்கொலையைச் செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். கிரணை ஊரை விட்டு வெளியேற்ற (கடிபாரூ) நாங்கள் நடவடிக்கை எடுத்து வந்தோம். நமது ரவுடி தடுப்புப் படையினரும் அவரைக் கண்காணித்து வந்தனர்” என்று கூறியிருந்தார்.