
பெர்லின்: டிசம்பர் 12-
‘’ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாங்கள் தான். 5 ஆண்டுகளுக்குள் நேட்டோவிற்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்த ரஷ்யா தயாராகிவிடும்’’ என நட்பு நாடுகளை நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார்.
இது குறித்து மார்க் ரூட் பேசியதாவது: மோதல் நம் வாசலில் உள்ளது. ரஷ்யா ஐரோப்பாவில் மீண்டும் போரை கொண்டு வந்துள்ளது. நாம் தயாராக இருக்க வேண்டும். ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாங்கள் தான். நமது கூட்டாளிகளில் அதிகமானோர் அமைதியாக மெத்தனமாக இருப்பதாக நான் அஞ்சுகிறேன். இதில் உள்ள அவசரத்தை உணரவில்லை. பலரும் காலம் நம் பக்கம் இருப்பதாக நம்புகின்றனர். 5 ஆண்டுகளுக்குள் நேட்டோவிற்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்த ரஷ்யா தயாராகிவிடும்.கடந்த தலைமுறையினர் போல, போரை தடுக்க பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செலவினங்களை அதிகரிக்க வேண்டும். ரஷ்யா ஏற்கனவே நமது சமூகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நமது தாத்தா, பாட்டி அல்லது கொள்ளு தாத்தா, பாட்டி அனுபவித்த போரின் அளவிற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நமது ஆயுதப்படைகள் நம்மை பாதுகாக்க தேவையான அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு மார்க் ரூட் பேசினார்.நேட்டோ எனப்படும் ராணுவ கூட்டமைப்பில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 32 நாடுகள் உள்ளன. இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல நாடுகள் உள்ளன. மொத்தமுள்ள 32 நாடுகளில் 30 நாடுகள் ஐரோப்பா கண்டத்தில் உள்ளது. ஏற்கனவே உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த சூழலில், நட்பு நாடுகளை நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார்.
















