
புதுடெல்லி: ஜூலை 28-
நீட் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களில் சிலர் விடுவிக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன. இதையடுத்து மீண்டும் போராட்டத்தை தொடங்க போவதாக கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் தான் கரப்பான் பூச்சி கட்சியுடன் மத்திய அரசு விடிய விடிய பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
நீட் போராட்டத்தில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது போராடிய மாணவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இருப்பினும், கைது செய்யப்பட்ட மாணவர்களில் சிலர் விடுவிக்கப்படவில்லை என்று தகவல் வெளியானது.
இந்தச் சூழலில் தான் மாணவர்களை விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடங்க போவதகார கரப்பான் பூச்சி கட்சி அறிவித்தது. இது தொடர்பாக நேற்று நள்ளிரவு அரசு பிரதிநிதிகளுடன் 3 மணி நேரம் ஆலோசனையை கரப்பான் பூச்சி கட்சி நடத்தியது. அப்போது போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது எந்தவிதமான போலீஸ் நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய அரசு மீண்டும் உறுதியளித்துள்ளதாக கரப்பான் பூச்சி கட்சி கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அனைத்தை மாநிலங்களும் வெளியிடும் என்றும் அரசு உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசு தனது வாக்குறுதிகளை மீண்டும் உறுதி செய்துள்ளதாக கூறிய கரப்பான் பூச்சி கட்சி தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பீகார் மற்றும் அசாம் மாநில அரசுகள் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பின் நகல்களை எங்களிடம் வழங்கினர்.
அதில் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆர்கள் திரும்பப் பெறப்படும் என்றும், எதிர்காலத்தில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்ற அறிவிப்புகளை சீக்கிரமே மத்திய அரசும், மற்ற மாநிலங்களும் வெளியிடும் என உறுதியளித்தனர். எந்த ஒரு போராட்டக்காரரையும் தனியாக விட்டுவிட மாட்டோம். இந்த போராட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்” என்றார்.
பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது தொடர்பாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய சவுரவ் தாஸ், “மத்திய அரசு போராட்டத்தை கைவிட எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. அது தொடர்பாக கேள்வி எழுப்பினோம். அதற்குப் பதிலாகவே அவர்கள் பீகார் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பைக் காட்டினார்கள். சீக்கிரம் மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு அறிவிப்புகளை வெளியிடும் என்றார்கள். இந்த போராட்டத்தில் பங்கேற்ற எந்த மாணவருக்கும் சட்ட ரீதியான பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது” என்றார்.













