
லத்தூர்: ஜூலை 7-
மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது.
ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு தேவையான எருதுகள் அல்லது டிராக்டரை வாங்க அவருக்கு வசதி இல்லை. அவற்றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்பதால், தானே எருதாக மாறி அம்பதாஸ் பவாரும் அவரது மனைவி முக்தாபாயும் பல ஆண்டுகளாக நிலத்தை ஒரு மரக்கலப்பை மூலம் உழுது விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய கடனை கூட அடைக்க முடியாமல் மிகவும் வறுமையில் வாடி வருகின்றனர். இதையடுத்து மகாராஷ்டிர கூட்டுறவுத் துறை அமைச்சர் பாபாசாகேப் பாட்டில் கடந்த சனிக்கிழமை அம்பதாஸ் பவார் வீட்டுக்கு நேரடியாக சென்றார். மேலும், கூட்டுறவு சொசைட்டியில் பவார் பெயரில் இருந்த விவசாய கடன் ரூ.42,500-ஐ அமைச்சர் பாட்டில் முழுமையாக செலுத்தினார். அத்துடன், கடன் பாக்கி இல்லை என்ற சான்றிதழை உடனடியாக பவாருக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டார்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை லத்தூர் மாவட்ட ‘கிரந்திகாரி ஷேத்கரி சங்காதன்’ என்ற அமைப்பு நிலத்தை உழுவதற்கு 2 மாடுகளை வாங்கி மேள தாளத்துடன் பவார் வீட்டுக்கு ஓட்டிச் சென்றனர். அங்கு மாடுகளை அவருக்கு பரிசாக வழங்கினர்.