ஹேசில்வுட்டை சாடிய மிட்செல் ஜான்சன்

சிட்னி, ஜூன் 16- ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விடவும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளரான ஹேசில்வுட்டை கடுமையாக சாடியுள்ளார் அந்த அணியின் முன்னாள் வீரரான மிட்செல் ஜான்சன். அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹேசில்வுட் விளையாடி இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் ஏற்பட்ட காரணத்தால் 18-வது ஐபிஎல் சீசன் சில நாட்கள் இடைநிறுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பி இருந்தனர்.
போர் நிறுத்தம் ஏற்பட்ட உடன் ஐபிஎல் மீண்டும் தொடங்கியது. இதில் வெளிநாடுகளுக்கு சென்ற வீரர்கள் சிலர் மீண்டும் பங்கேற்று விளையாடினர். சிலர் பங்கேற்கவில்லை. ஹேசில்வுட், ஆர்சிபி அணிக்காக இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். இந்த ஐபிஎல் சீசனில் மொத்தம் 22 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி உடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட் விளையாடினார். இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தமாக 2 விக்கெட்டுகளை மட்டுமே அவர் கைப்பற்றி இருந்தார். இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், ஹேசில்வுட்டை கடுமையாக சாடியுள்ளார் ஜான்சன். “கடந்த சில ஆண்டுகளாக உடற்திறன் சார்ந்து சில பின்னடைவுகள் ஹேசில்வுட்டுக்கு இருக்கிறது. இதை நாம் அறிவோம். இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் தயாரானது. ஆனால், ஹேசில்வுட் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தார். அவரது முடிவு புருவங்களை உயர்த்தச் செய்தது. அதே நேரத்தில் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ், நேதன் லயன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் நால்வர்கள். அனுபவத்தின் அடிப்படையில் அவர்களை ஆஷஸ் தொடருக்காக மட்டும் அணியில் தக்கவைக்கப்படக்கூடாது. சாம் கான்ஸ்டாஸ், ஜாஷ் இங்கிலிஸ், 36 வயதான ஸ்காட் போலண்ட் ஆகியோர் வாய்ப்புக்காக காத்துள்ளனர். எதிர்வரும் தொடர்களில் சில மாற்றங்களை தேர்வர்கள் முயற்சிக்கலாம் என கருதுகிறேன். குறிப்பாக பேட்டிங்கில் டாப் ஆர்டரில் அதை பரிசீலிக்கலாம்” என ஜான்சன் கூறியுள்ளார்.